ஐ படம் டீசர் பார்த்து நான் மெர்சலாயிட்டேன் என்று நடிகர் விஜய் கூறியுள்ளார். நடிகர் விக்ரம் தனது மிக நெருங்கிய நண்பர் என்றும், இயக்குநர் ஷங்கர்தான் தனது குரு என்றும் நடிகர் விஜய் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கார்த்திக் கிரிஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'கப்பல்'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.
ஷங்கர் தனது தயாரிப்பு நிறுவனமான எஸ் பிக்சர்ஸ் சார்பில் வெளியிடுகிறார். விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான், விஜய், விக்ரம், கே.வி.ஆனந்த், வசந்தபாலன், விடிவி கணேஷ் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். படத்தின் ஆடியோவை விக்ரம் வெளியிட விஜய் பெற்றுக்கொண்டார்.
விழாவில் பேசிய விஜய், "இயக்குநர் ஷங்கர் ஒரு படத்தை வாங்கி வெளியிடுகிறார் என்றால், அதற்கு மேல் அந்தப் படத்திற்கு வேறு எதுவும் தேவையில்லை. ஷங்கருக்கு ஒரு படம் பிடித்துவிட்டால், அதற்கு மேல் இயக்குநருக்கு வேறு எதுவும் தேவையில்லை.
'கப்பல்' திரைப்படம் ஷங்கர் சார் உள்ளே வந்தவுடன் ஏற்கனவே வெற்றியடைந்து விட்டது. படத்தின் போஸ்டர்கள் மற்றும் பாடல்கள் அனைத்துமே புதுமையாக உள்ளன.
நீண்ட நாள் கழித்து எனது நண்பர் விக்ரமுடன் மேடையில் நிற்பது சந்தோஷமாக இருக்கிறது. யாராவது என்னிடம் திரையுலகில் உங்களுடைய நண்பர் யார் என்று கேட்டால், நான் உடனே சொல்லுவது கென்னி (விக்ரம்) என்றுதான்.
விக்ரமுடனான நட்பு சினிமாவை தாண்டிய நட்பு. அவரது குடும்பம் எங்களது வீட்டிற்கு வருவது, எனது குடும்பம் அவரது வீட்டிற்கு செல்வது என எங்களது நட்பு குடும்பம் வரை தொடர்கிறது.
அவருடைய ஐ, பட டீசர் பார்த்து மிரண்டு போய் விட்டேன், மெர்சலாயிட்டேன். பாட்டை கேட்டும் மெர்சலாயிட்டேன். ஐ படம் பார்க்க ஐயம் வெயிட்டிங். அதே போல இயக்குநர் ஷங்கரும் எனக்கு நெருக்கமான நண்பர்களில் ஒருவர் மட்டுமன்றி அவரை நான் குருவாக கருதுகிறேன்.
'நண்பன்' படத்தில் நடிக்கும் போது ஷங்கர் எப்படி பணியாற்றுகிறார் என்பதை பார்த்து நிறைய கற்றுக் கொண்டேன்" என்றார்.

0 comments:

Post a Comment

 
Top
Blogger Template